Last Updated : 10 Nov, 2018 11:55 AM

 

Published : 10 Nov 2018 11:55 AM
Last Updated : 10 Nov 2018 11:55 AM

நதி கரைகளில் பசுமைத் தோட்டங்கள்: ரூ.415 கோடி செலவில் ஒடிசா அரசு திட்டம்

ஒடிசாவில் நதிகளின் இரு கரைகளிலும் பசுமைத் தோட்டங்கள் அமைப்பதற்கு அம் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் நோக்கம் ஆறுகள் புத்துயிர் பெறவேண்டும் என்பதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒடிசாவில் பாயும் மகாநதி, ப்ரஹ்மானி, பாய்தாரிணி மற்றும் ருசியகுலா ஆகிய நதிகளின் இரு கரைகளிலும் பசுமைத் தோட்டங்கள் அமைப்பதற்கு ஒடிசா அமைச்சரவை நேற்று (வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.

நதியின் கரையிலிருந்து நிலப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு தோட்டங்கள் அமைக்கப்படும். பைதாரணி, ப்ரைஹ்மாணி, ருஷிகுலா ஆகிய நதிகளின் கிளை நதிகள் மற்றும் டெல்டா ஆறுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கான செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் தொடக்கப் பணிகள் 2019-20ஆம் நிதியாண்டிலேயே நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மகாநதிக்கான இப்பணிகள் 2018 தொடங்கி 2023 வரை ஐந்தாண்டுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இப்புதிய திட்டம் அமைப்பதற்கு ரூ.448 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ரூ.415 கோடி தோட்டப்பணிகள் நிறைவேற்றவும் மீதமுள்ள ரூ.33 கோடியில் தோட்டப்பணிகள் அமைப்பது தொடர்பான இதர பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.

மாநில அளவில் நடைபெறும் பசுமைப் பணிகளின் முன்னேற்ற நடவடிக்கைகளை தலைமைச் செயலாளர் தலைமையிலான 12 பேர் அடங்கிய குழு கண்காணிக்கும்.

அதேநேரம் வழக்கமாக நடைபெறக்கூடிய மாவட்ட, வட்டார அளவிலான கண்காணிப்புப் பணிகளும் நடைபெறும்.

இவ்வாறு ஒடிசா மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x