Published : 08 Nov 2018 06:03 PM
Last Updated : 08 Nov 2018 06:03 PM
மேற்கு வங்க ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டு நவ.14-ம் தேதியன்று ஓராண்டு முடிவடையும் நிலையில், அதைக் கொண்டாட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, நவம்பர் 14-ம் தேதி ரசகுல்லா தினம் கொண்டாடப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
ரசகுல்லா தினத்தன்று, வெவ்வேறு வகை ரசகுல்லாக்கள் காட்சிப்படுத்தப்படும். இது நியூ டவுன் பகுதியில் உள்ள சூழலியல் பூங்காவில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
பாலாடைக்கட்டியால் ஆன பஞ்சு போன்ற உருண்டைகளை பாகில் ஊறவைத்து தயாரிப்பதே ரசகுல்லா. ரசகுல்லாவை 1868-ல் நபின் சந்திர தாஸ் முதலில் தயாரித்து அறிமுகம் செய்ததாக மேற்கு வங்கம் உரிமை கோரியது. தங்களது ரசகுல்லா 150 வருட பழமை வாய்ந்தது என்று தெரிவித்தது மேற்கு வங்கம்.
ஒடிசாவோ, தங்களது ரசகுல்லா குறைந்தது 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், ஜகன்நாத கடவுள் லட்சுமி தாயாருக்கு இதனை வழங்கிய ஐதீகம் இருப்பதாகவும், இதற்கு மேற்கு வங்கம் உரிமை கோர கூட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தது.
ஆனால் ஆதாரத்தைக் காட்டிய மேற்கு வங்கத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இதைத் தொடர்ந்து அதன் விற்பனை 25 சதவீதம் உயர்ந்தது.
புவிசார் குறியீடு எதற்கு, ஏன்?
புவிசார் அடையாளம் கொண்ட பொருட்கள் என்பது விவசாயம், இயற்கை மற்றும் கைவினை, தொழில்துறை சார்ந்து அந்தந்தப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடியதாகும். அவை அந்தப் பகுதிகளின் பாரம்பரியப் பொருட்களாகவும் இருக்கும். அந்தப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அதன் தரம் மற்றும் தனித் தன்மை பாதுகாக்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் மட்டும் 2 லட்சம் உற்பத்தியாளர்கள் ரசகுல்லா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 7.5 லட்சம் பணியாளர்கள் ரசகுல்லா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT