Last Updated : 08 Nov, 2018 07:16 PM

 

Published : 08 Nov 2018 07:16 PM
Last Updated : 08 Nov 2018 07:16 PM

‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை திட்டமிட்ட காட்டுமிராண்டித்தனமான சதித்திட்டம்’: ராகுல் காந்தி தாக்கு

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமான சதித்திட்டம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.

நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினார்கள். அந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், ''மத்தியில் ஆளும் ஆளும் பாஜக அரசு 2016, நவம்பர் 8-ம் தேதி கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சதித்திட்டம். தன்னுடைய மிகப்பெரிய தொழிலதிபர்கள் நண்பர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக்கொள்ள மத்திய அரசு அமைத்துக்கொடுத்த சூட்சமமான திட்டம் பண மதிப்பிழப்பு.

இந்த ஊழலில் எந்தவிதமான அறியாமையும் இல்லை, இந்தத் திட்டம் தேசத்தின் அறிவுத்திறனை அவமதிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்'' எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அறிக்கையில், 2 ஆண்டுகள் ஆகியும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய வடுக்கள், தழும்புகள் இன்னும் மறையவில்லை, நாட்டின் பொருளாதாரம் மீளவில்லை. முன்யோசனையின்றி செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x