Published : 08 Nov 2018 03:04 PM
Last Updated : 08 Nov 2018 03:04 PM

அகமதாபாத் பெயர் மாறுகிறது? - குஜராத் அரசு பரிசீலனை

உ.பி. மாநிலம் அலகாபாத், பைசாபாத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரின் பெயரை மாற்ற அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரான அலகாபாத்தின் பெயரை மாற்றி, பிரயாக்ராஜ் என்று அம்மாநில பாஜக அரசு புதிய பெயர் சூட்டியுள்ளது. அலகாபாத் என்ற பெயர் சமீபத்தில் வைக்கப்பட்டப் பெயர், பிரயாக்ராஜ் என்ற பெயரே பாரம்பரியமான பெயர் என்று முதல்வர் ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார். அதுபோலவே அயோத்தி நகரம் அமைந்துள்ள பைஸாபாத் பெயரை ‘அயோத்தி’ என்று மாற்றி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பெயரை மாற்றவது குறித்த பரிசீலித்து வருவதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் கூறுகையில் ‘‘அகமதாபாத் பெயரை மாற்ற வேண்டும் என நீண்டநாட்களாகவே கோரிக்கை இருந்து வருகிறது. அதற்கான தக்க தருணம் தற்போது வந்துள்ளதாக எண்ணுகிறோம். இதுபற்றி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இதுபற்றி முடிவெடுத்து அறிவிக்கப்படும்’’ எனக் கூறினார்.

அகமதாபாத் நகரின் பெயரை ‘கர்னாவதி’ என்று மாற்ற வேண்டும் என ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல அமைப்புகள் கோரி வருகின்றன. 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கரண் தேவ் என்ற மன்னர் தற்போதைய அகமதாபாத் நகரை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது. அவரது பெயரால் கர்னாவதி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x