Last Updated : 21 Nov, 2018 11:29 AM

 

Published : 21 Nov 2018 11:29 AM
Last Updated : 21 Nov 2018 11:29 AM

பண மதிப்பிழப்பால் லட்சக்கணக்கான விவசாயிகள் உரம், விதை வாங்கமுடியாமல் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சகம்

பிரதமர் மோடியால் கடந்த 2016-ம் ஆண்டு நாட்டில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கான விவசாயிகள் உரம், விதைகள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனர் என்று மத்திய வேளாண் துறை அமைச்சகம், நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் அறிக்கை அறிவித்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடிவடிக்கையின் பாதிப்பை அந்த அரசில் உள்ள வேளாண் துறையே ஒப்புக்கொண்டு அறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊழல் கரையான்களை ஒழிப்பதற்காகவே கசப்பான மருந்தான பண மதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டது என்று பிரதமர் மோடி மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று பேசி இருந்தார். அவர் பேசிய அன்றே பண மதிப்பிழப்பின் பாதிப்பை அவரின் அமைச்சரவையில் உள்ள வேளாண்துறை அறிவித்துள்ளது.

நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி உள்ளார். மத்திய வேளாண் அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அளித்த அறிக்கையின் சுருக்கத்தை தெரிவித்தார்.

மேலும், மத்திய வேளாண் துறை அளித்த அறிக்கையை 'தி இந்து' (ஆங்கிலம்)ஆய்வு செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''நாட்டில் உள்ள விவசாயிகள் தங்களின் கரீப் பயிர்களை விற்பனை செய்து கொண்டிருந்த நேரத்திலும், ராபி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த நேரத்திலும், கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டது.

இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், சந்தையில் புழக்கத்தில் இருந்த பணம் வங்கிக்குச் சென்றது, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ரொக்கப் பணத்தை மட்டும் நம்பி இந்தியாவில் 26.30 கோடி விவசாயிகள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த விவசாயிகளிடம் போதுமான பணம் கையிருப்பு இல்லாத காரணத்தால், ராபி பருவத்துக்கு தேவையான விதைகளையும் உரத்தையும் வாங்க முடியவில்லை. மிகப்பெரிய நிலச்சுவான்தார்கள் கூட நாள்தோறும் தங்கள் நிலத்தில் வேலைசெய்த விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும், வேளாண் நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமலும் சிரமப்பட்டுள்ளனர்.

விவசாயிகளிடம் கடுமையான பணப் பற்றாக்குறை நிலவியதால், தேசிய விதைகள் கழகம் (என்எஸ்சி) கூட ஏறக்குறைய 1.38 லட்சம் குவிண்டால் கோதுமை விதைகளை விவசாயிகளிடம் விற்பனை செய்ய முடியாமல்போனது. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளைக் கொண்டு கோதுமை விதைகளை வாங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு அனுமதி அளித்தும் விதைகள் விற்பனை சூடுபிடிக்கவில்லை'' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காரசாரமான கேள்விகளைக் கேட்டுள்ளனர். குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், 2017, ஜனவரி-ஏப்ரல் மாதம் வரை நாட்டில் 15 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று மத்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் அறிக்கை அளித்தும் மத்திய அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், மத்திய தொழிலாளர் துறை அமைச்சகமோ பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் புகழ்ந்து அறிக்கை அளித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வேலைவாய்ப்பு 1.22 லட்சத்தில் இருந்து, 1.85 லட்சமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x