Last Updated : 29 Nov, 2018 03:02 PM

 

Published : 29 Nov 2018 03:02 PM
Last Updated : 29 Nov 2018 03:02 PM

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்வதை தடுத்தால் நிர்வாணப் போராட்டம்: தமிழக விவசாயிகள் எச்சரிக்கை

பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி வெள்ளிக்கிழமை நடத்தும் போராட்டத்தை போலீஸார் தடுத்தால் நிர்வாணப் போராட்டம் நடத்துவோம் என்று தேசிய தென்னிந்திய நிதிகள் ஒருங்கிணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு எச்சரிக்கை விடுத்தார்.

வேளாண் பயிர்க் கடன் தள்ளுபடி, உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடாளுமன்றத்தை நோக்கி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேரணி செல்கின்றனர்.

இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நிதிகள் ஒருங்கிணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு இன்று ரயில்கள் மூலம் வந்தனர். கையில் மண்டை ஓடுகளுடன் ரயில் நிலையத்தில் இறங்கிய தமிழக விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

அதன்பின் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு நிருபர்களிடம் கூறுகையில் “ கடன் தள்ளுபடி, உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தை நோக்கி லட்சக்கணக்கில் விவசாயிகள் பேரணி நடத்துகிறோம். தமிழகத்தில் இருந்து ஆயிரத்தும்மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கிறார்கள். திருச்சி, கரூரில் இருந்து ஏராளமான விவசாயிகள் வருவார்கள்.

கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்ட என்னுடைய சக தோழர்களின் மண்டை ஓடுகளைத்தான் கையில் வைத்துள்ளேன். எங்கள் பகுதியில் நெல், பருத்தி, தோட்ட விவசாயத்தில்தான் விவசாயிகள் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவிய வறட்சியாலும், தண்ணீர் இல்லாததாலும் விவசாயம் பொய்த்துவிட்டது. இந்த ஆண்டு கஜா புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இதுவரை 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

நாளை நாங்கள் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் பேரணிக்கு போலீஸார் தடை விதித்தால், நாங்கள் அனைவரும் நிர்வாணப் போராட்டம் நடத்துவோம்” என அய்யாகண்ணு எச்சரிக்கை விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x