Published : 08 Nov 2018 05:40 PM
Last Updated : 08 Nov 2018 05:40 PM

பாஜகவுக்கு எதிரான கூட்டணி: தேவகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கு முயற்சியாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

கடந்த வாரம் டெல்லியில் காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்கட்சிகளும், காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.

இதுபோலவே பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரையும் சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவை, சந்திரபாபு நாயுடு இன்று பெங்களூருவில் சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக முதல்வர் குமாரசாமியும் உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவகவுடா, ‘‘நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை காக்கவும், பிரதமர் மோடியின் மோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது மிகவும் அவசியம்.

இதற்கான தருணம் தற்போது வந்துள்ளது. கர்நாடக இடைத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பளித்துள்ளனர். நாடுமுழுவதும் இந்த வெற்றி எதிரொலிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது மிகவும் அவசியம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x