Published : 18 Nov 2018 08:46 AM
Last Updated : 18 Nov 2018 08:46 AM
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்துள்ள சூட கொண்டப்பள்ளியை சேர்ந்த புதுமண தம்பதி நந்தீஷ் (25) - சுவாதி (21) கொலை செய்யப்பட்டனர். கர்நாடகாவில் உள்ள சிவனசமுத்திரம் அருகே காவிரி ஆற்றில் வீசப்பட்ட இருவரின் சடலங்களையும் மண்டியாவில் உள்ள பெலகாவாடி போலீஸார் 15-ம் தேதி மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெலகாவாடி போலீஸார் சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரகாஷ் தேவராஜ் கூறும்போது, "கைதான 3 பேரையும் கொலை நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தோம். சாதி மாறி, திருமணம் செய்து கொண்ட தாலேயே இருவரையும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ள னர். இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீது ஆள் கடத்தல், கொலை செய்தது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொலையால் ஓசூரில் பதற்றம் நிலவுவதால், நந்தீஷ் - சுவாதி ஆகியோரின் உடல்கள், இரு குடும்பத்தினரின் ஒப்புதலின் பேரில் காவிரி ஆற்றின் கரையிலே நேற்று முன்தினம் இரவு எரிக்கப்பட்டன’’ என்று தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு, பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், மாதர் சங்க மாநில செயலாளர் சுகந்தி உட்பட 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் ஓசூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று ஓசூர் கோட்டாட்சியர் விமல்ராஜிடம் மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT