Published : 09 Nov 2018 07:25 PM
Last Updated : 09 Nov 2018 07:25 PM
கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயன்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியோ கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களைப் பாதுகாக்க முயல்கிறது என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்து 2 ஆண்டுகள் முடிவதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி தனது நண்பர்கள் வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மாற்ற உதவி செய்யும் வகையில் பண மதிப்பிழப்பைக் கொண்டு வந்தார் என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''இந்திய அரசியலில் மிகப்பெரிய போர் நடந்து வருகிறது. கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களைக் காக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பொய்களையும், பேசியதையே மீண்டும் பேசி வருகிறார். பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு வளர்ந்து வருகிறது, ஆனால், ராகுல் காந்தியின் குடும்பத்தினர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். ராகுல் காந்தி குடும்பத்தினர் 4 தலைமுறைகளாகச் சேர்த்து வைத்திருந்த மோசமான வழியில் சேர்த்த சொத்துகள் அனைத்தும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் அழிக்கப்பட்டன.
ஆனால், பணக்காரர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உருவாக்கப்பட்டது பண மதிப்பிழப்பு என்று ராகுல் காந்தி மற்றொரு பொய்யைச் சொல்கிறார். கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, வரி செலுத்துவோர் கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதன் மூலம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசுக்குக் கூடுதலாக வருமான வரி மூலம் கூடுதலாக ரூ.35 ஆயிரம் கோடியும், பினாமியின் சொத்துக்கள் ரூ.4,300 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நக்சலைட்டுகள் நடவடிக்கை கடந்த 2009-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2017-ம் ஆண்டில் 60 சதவீதம் குறைந்துவிட்டது.ஏராளமான நக்சலைட்டுகள் வன்முறையைக் கைவிட்டு, போலீஸிடம் சரணடைந்துள்ளனர்''.
இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT