Published : 11 Oct 2018 06:25 PM
Last Updated : 11 Oct 2018 06:25 PM
காஷ்மீரில் வியாழக்கிழமை நடந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் பிஎச்டி மாணவராக இருந்து தீவிரவாதியாக மாறிய மனான் வானி உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
தாக்குதல் விவரங்கள்
வடக்கு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் மனான் வானி உட்பட மூன்று தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) காலை அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
இதைத் தொடர்ந்து அதிகாலையில் இருந்து அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மனான் வானி உட்பட தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.
பிஎச்டி மாணவராக இருந்து தீவிரவாதி ஆனவர்
காஷ்மீரைச் சேர்ந்த பஷீர் அகமது வானியின் மகன் மனான் வானி. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் புவியியலில் இளங்கலை முடித்த மனான் வானி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முதுகலையும், எம்.பில்லும் படித்தார்.
அதைத் தொடர்ந்து ஏஎம்யுவிலேயே பயன்பாட்டு புவியியலில் பிஎச்டி சேர்ந்தார். படிப்பில் சிறந்து விளங்கிய வானி, 'தண்ணீர், சுற்றுச்சூழல், ஆற்றம் மற்றும் சமூகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் முதல் பரிசு பெற்றவர்.
கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி மனான் வானியின் போன் அணைத்து வைக்கப்பட்டது. ஜனவரி 5-ம் தேதி அவர் தீவிரவாதத்தில் சேர்ந்ததாக இணையதளங்களில் தகவல் பரவியது. குறிப்பாக அவர் சீருடையில் துப்பாக்கியை ஏந்தி நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் வைரலானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT