Published : 04 Oct 2018 12:32 PM
Last Updated : 04 Oct 2018 12:32 PM
சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் குடியேறிய ரோஹிங்கியாக்கள் 7 பேரை அசாமில் இருந்து மியான்மருக்கு நாடு கடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இவர்கள் தங்களின் சொந்த நாடான மியான்மருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்கள் தப்பி, வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். வங்கதேசம் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ரோஹிங்கியாக்கள் நாடு கடத்தல் குறித்து உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கூறும்போது, ''2012-ல் 7 ரோஹிங்கியாக்கள் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறினர். அவர்கள் வெளிநாட்டினர் சட்டப்படி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் மியான்மர் அவர்களைத் தங்களின் குடிமக்களாக ஏற்றுள்ளது. அவர்களுக்குச் சான்றிதழ் அளித்துள்ள மியான்மர் அரசு, அவர்களைத் தங்கள் நாட்டுக்குத் திரும்பப் பெற ஒரு மாத விசாவை அளித்துள்ளது'' என்று தெரிவித்ததது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, அரசின் முடிவில் தலையிடவில்லை என்று தெரிவித்து அவர்களை நாடு கடத்த அனுமதி அளித்தது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரத்தில் கூறும்போது, ''மணிப்பூர் அருகே மியான்மர் எல்லைப் பகுதியில் அந்நாட்டு அதிகாரிகளிடம் ரோஹிங்கியாக்கள் ஒப்படைக்கப்படுவார்கள்'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT