Last Updated : 20 Oct, 2018 04:06 PM

 

Published : 20 Oct 2018 04:06 PM
Last Updated : 20 Oct 2018 04:06 PM

அமிர்தசரஸ் ரயில் விபத்து: உயிரிழந்த 13 வயது சிறுவனின் உடலைவைத்து ஜலந்தர் நெடுஞ்சாலையில் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்

அமிர்தசரஸில் நடந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் குடும்பத்தினர் அமிர்தசரஸ்-ஜலந்தர் நெடுஞ்சாலையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தசரா விழா நேற்றுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடந்தன. இதன் ஒருபகுதியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில் ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 60 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் உயிருக்குக் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவன் சதீஷ்ஷின் குடும்பத்தினர், அவனது உடலை வைத்துக்கொண்டு அமிர்தசரஸ் நெடுஞ்சாலை வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இக் கோர சம்பவத்திற்கு அரசையும் அதிகாரிகளையும் குறைகூறிய அவர்கள் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

''அவன் திருவிழா பார்த்துவிட்டு வருவதாகச் சென்றான், ஆனால் திரும்பி வரவில்லை, '' என்று உயிரிழந்தவரின் தந்தை சோகத்தோடு கூறினார்.

நேற்று இரவு நடந்த ரயில் விபத்தின்போது, சம்பவ இடத்தில் இருந்த ஒருவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அவர் இவ்விபத்து குறித்து ஏஎன்ஐயிடம் பேசியதாவது:

''ரயில் ஹாரன் ஒலிக்கவில்லை. வளர்ந்தவர்களாக இருந்த எங்களில் பலரும் தூக்கியெறியப்பட்டோம். ஆனால் உயிரிழந்துள்ள சதீஷ் மிகமிக சிறியவன். அவனுக்கு என்ன செய்வதென்று புரிந்திருக்க வாய்ப்பில்லை. ரயில் 100 கி.மீ.வேகத்திற்கும் அதிக வேகத்தில் ஓடியது. இவ்விபத்து சம்பந்தமான வீடியோ ஒன்றும் என்னிடம் உள்ளது.''

அமிர்தசரஸ் நகரின் ஜோதா பதக் பகுதியில் உள்ள சவுரா பஜார் என்னும் இடத்தில் இவ்விபத்து நடந்துள்ளது. ராவண வதத்தைக் காண தண்டவாளங்களில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே ரயில் பாய்ந்து சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே 60 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பிரதமர் மோடி, ரயில் விபத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x