Published : 23 Oct 2018 05:12 PM
Last Updated : 23 Oct 2018 05:12 PM
செவ்வாய்க்கிழமை மட்டும் வீடுகளில் கொள்ளையடிக்கும் வித்தியாசமான பழக்கம் கொண்ட கொள்ளையர்கள் இருவர் ஹைதராபாத் போலீசிடம் சிக்கினார்கள்.
இது குறித்து ஹைதராபாத் போலீஸ் ஆணையர் அஞ்சனைக் குமார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக ஆகிய 3 மாநிலங்களில் பூட்டியிருக்கும் வீடுகளில் செவ்வாய்க்கிழமை மட்டும் அதிகமாகக் கொள்ளையடிக்கும் சம்பவம் நடந்து வந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தியபோதிலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில்,நேற்று முன்தினம் வாகனச் சோதனையின் போது, இரு சக்கர வாகனத்தில் வந்த முகமது சமீர்கான், முகமது சோகைப் ஆகிய இருவர் போலீஸிடம் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களைத் தெரிவித்தனர்.
அவர்களை போலீஸார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று முறைப்படி விசாரணை நடத்தியதில், அவர்கள் செவ்வாய்கிழமை மட்டும் கொள்ளையடிக்கும் வழக்கத்தை கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, நாங்கள் விசாரணை நடத்தி வந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்திய போது அந்த வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
இந்த இரு கொள்ளையர்களும் செவ்வாய்க்கிழமை மட்டும் கொள்ளையடிப்படை வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற நாட்களில் திருடினால் போலீஸிடம் சிக்கிக்கொள்வோம் என்ற நம்பிக்கை இருந்ததால், மற்ற நாட்களில் இவர்கள் கொள்ளையடிப்பதில்லை.
இதில் முகமது சமீர்கான் என்ற கொள்ளையன் ஒரு திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்றபோது, முகமது சோகைப்பின் பழக்கம் ஏற்பட்டது. அப்போது இருந்து இருவரும் சேர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று கொள்ளையடித்து வருகின்றனர். இதில் சமீர்கானின் முன்னோர்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள். சமீர்கானுக்கு இரவில் பார்வை சிறிது மந்தம் என்பதால், பகலில் மட்டும் கொள்ளையடித்து வந்துள்ளனர்.
பூட்டிய வீடுகளை நோட்டமிடும் இருவரும் செவ்வாய்க்கிழமை பகலில் கொள்ளையடிப்பார்கள். இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும், வீட்டுக்கு வெளியே ஒரு கொள்ளையர் நின்று கண்காணிப்பார், மற்றொரு கொள்ளையர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அடுத்த 10 நிமிடங்களில் அனைத்து விலைமதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையடித்துதிரும்பி விடுவார்.
செவ்வாய்க்கிழமை ஒரு வீட்டில் கொள்ளையடித்துவிட்டால், அடுத்த 6 நாட்கள் வேறு எங்கும் கொள்ளையடிக்காமல் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் கர்நாடக, தெலங்கானா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரிடம் இருந்து 700 கிராம் தங்கம், ரூ.21 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு போலீஸ் ஆணையர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT