Published : 23 Oct 2018 05:53 PM
Last Updated : 23 Oct 2018 05:53 PM
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமாருக்கு 7 நாள் காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டதாக டிஎஸ்பி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மொயின் குரேஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளருக்கு எதிரான வழக்குகளை சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா, தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க, ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் மனோஜ் பிரசாத் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டதாகவும் புகார் கூறினார். இதையடுத்து மனோஜ் பிரசாத் கைது செய்யப்பட்டார். அவர், ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராகேஷ் அஸ்தானா, அவருடன் பணியாற்றிய அதிகாரிக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்தப் புகாரை ராகேஷ் அஸ்தானா மறுத்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையில் உள்ள அதிகாரிகள் சிலர் தனக்கு எதிராகச் சதி செய்வதாக அவர் கூறினார். மேலும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் அவரது முதன்மை கண்காணிப்பு அதிகாரி அருண் சர்மா ஆகிய இருவரும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் மொயின் குரேஷி வழக்கை விரைந்து முடிக்க தொழிலதிபர் சதீஷ் சனாவிடமிருந்து அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார் கூறினார்.
தொழிலதிபர் சதீஷ் சனாவின் வாக்குமூலத்தில் திருத்தம் செய்ததாக டிஎஸ்பி தேவேந்திர குமார் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டார். இவர் மொயின் குரேஷி வழக்கில் ராகேஷ் அஸ்தானாவுடன் இணைந்து பணியாற்றியவர். இந்நிலையில் தேவேந்திர குமாருக்கு 7 நாள் காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நீதிபதி சந்தோஷ் சினேகி பிறப்பித்துள்ளார்.
முன்னதாக சிபிஐ, தங்களின் டிஎஸ்பி தேவேந்திர குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் அவை குறித்து விசாரிக்க 10 நாள் காவலில் எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தைக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT