Published : 01 Oct 2018 10:08 PM
Last Updated : 01 Oct 2018 10:08 PM
பன்னாட்டு நிதியத்தின்(ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியாவில் பிறந்த பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பின், 2-வது தாக ஐஎம்எப்க்கு நியமிக்கப்படும் 2-வது இந்திய பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநராக இருக்கும் மவுரீஸ் ஆப்ஸ்பீல்ட் இந்த ஆண்டு ஓய்வு பெற்றபின், அடுத்ததாக கீதா கோபிநாத் பொறுப்பேற்க உள்ளார்.
தற்போது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச கல்வி மற்றும் பொருளாதாரத்துறையில் பேராசிரியராக கீதா கோபிநாத் பணியாற்றி வருகிறார்.
முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார். ஆனால், சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் கீதா கோபிநாத்தின் பொருளாதார கொள்கைகள், சந்தைதொடர்பான நோக்கங்கள், தடையில்லா பொருளாதார கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கீதா கோபிநாத் கடந்த 2001-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலையில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும், வாஷிங்டன் பல்கலையில் எம்.ஏ பொருளாதாரப் பட்டமும் பெற்றார். தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் கீதா முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் கடந்த 2001-ம் ஆண்டு சிகாகோ பல்கலையில் சேர்ந்த கீதா கோபிநாத் துணை பேராசிரியராகச் சேர்ந்து, அதன்பின், 2005-ம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கு மாறினார்.
இது குறித்து ஐஎம்எப் தலைவர் லகார்டே வெளியிட்ட அறிக்கையில், கீதா கோபிநாத் சர்வதேச அளவில் மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர். சிறந்த கல்வியாளர், ஆய்வாளர், தன்னுடைய திறமையையும், புத்திசாலித்தனத்தையும் பல்வேறு தளங்களில் நிரூபித்துள்ளார். பொருளாதார அணுகுமுறையில் சர்வதேச அனுபவம் கொண்டவர் கீதா கோபிநாத். அவரை தலைமைப் பொருளாதார வல்லுநராக ஐஎம்எப்க்கு நியமிப்பதில் பெருமை கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT