Published : 11 Oct 2018 11:50 AM
Last Updated : 11 Oct 2018 11:50 AM

நிர்மலா சீதாராமன் திடீர் பிரான்ஸ் பயணத்தால் சர்ச்சை: ராகுல் காந்தி சரமாரி கேள்வி

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை நிலவி வரும் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், 3 நாள் அரசு முறை பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார். அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லேவை சந்தித்து பேசுகிறார். அப்போது, ரபேல் போர்விமான ஒப்பந்தம் குறித்தும் அந்நாட்டு அரசுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆனால் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதை காங்கிரஸ் கண்டித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்க கூறியுள்ளதாவது:

‘‘ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதற்கான காரணம் என்ன?

நீதிமன்றம் கேட்டுள்ள விளக்கங்களுக்கு இனிமேல்தான் காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே நிர்மலா சீதாராமன் அவசரமாக பிரான்ஸ் சென்றுள்ளார்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x