Published : 13 Oct 2018 09:52 PM
Last Updated : 13 Oct 2018 09:52 PM

தெற்கு ரயில்வேயின் ‘ரயில்பார்ட்னர்’: ரயில் பயணிகளுக்கு உதவும் கூடிய ‘அரிய ஆப்ஸ்’ அறிமுகம்

ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில், ரயில்களின் வருகை, புறப்படும் நேரம், சிறப்பு ரயில்கள், பாதுகாப்பு எண்கள் என பல்வேறு வசதிகளுடன் கூடிய செயலியை(ஆப்ஸ்) தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் வர்த்தகத்துறை இந்தச் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயணிகளும், ரயில்வே துறையும் நேரடியாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்வசதியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிறுவனங்கள் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரயில்வே ஆப்ஸ்களால் ஏராளமான குறைபாடுகள் உள்ளன என்று ரயில்வே துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ரயில்கள் வருகை, புறப்படும் நேரம் குறித்து தவறான தகவல், ரயில்கள் செல்லும் மார்க்கம் உள்ளிட்டவையும், கட்டணம் ஆகியவையும் குழப்பமாக இருப்பதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து தெற்கு ரயில்வே சுயமாக இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆப்ஸ்களில் ரயில்கள் குறித்த வருகை, புறப்படும் நேரம் ஆகியவை குறித்த புள்ளிவிவரங்கள் தானாக அப்டேட் செய்யும் வசதி இல்லை. அவர்களால் ரயில்வே துறையுடன் நேரடியாக தொடர்பும் கொள்ள முடியாது. ஆனால், நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த செயலியில் ரயில்நேரம் தானாகவே அப்டேட் செய்து கொள்ளும்.

அனைத்து ஆன்ட்ராய் மொபைல் போன்களிலும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். பார்வை சவால் கொண்டவர்கள் கூட இந்த செயலியை பயன்படுத்தி, அதில்உள்ள “டாக்பேக்” ஸ்பீக்கர்களை பயன்படுத்தி ரயில் வருகை, புறப்படும் நேரத்தை அறிந்துகொள்ள முடியும்.

மேலும், பெண்கள், குழந்தைகள், முதியோருக்குப் பயன் அளிக்கும் வகையில், 20வகையான வசதிகள், உதவி எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. பயணத்தின் போது,மருத்துவ வசதி, ஆர்பிஎப் உதவி, ஜிஆர்பி உதவி, பெண்களுக்கான உதவி எண்கள், இ-கேட்டரிங் வசதி, குழந்தைகளுக்கான உதவி எண்கள், யுடிஎஸ் வசதி, லஞ்சஒழிப்புத்துறை, அனைத்து முக்கிய ரயில்நிலையங்களின் தொலைப்பேசி எண்கள் என பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன.

இந்த ஆன்ட்ராய்ட் ஆப்ஸில் வழக்கமான ரயில்கள் தவிர்த்து சிறப்பு ரயில்கள், பண்டிகை நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள், நேரம், வழித்தடம் ஆகியவை அளிக்கப்படும். இவை தானாக அப்டேட் செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து,ஒருமுறை மட்டும் நமது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்தச் செயலி ஆன்-லைன, மற்றும் ஆப்-லைனிலும் இயங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

ஆன்-லைனில் வைத்திருக்கும் போது ரயில்துறையின் முக்கிய அறிவிப்புகள், ரயில் வருகை நேரம், புறப்படும் நேரம் மாற்றம் ஆகியவை தெரிவிக்கப்படும். மேலும், எஸ்எம்எஸ் வசதி, ரயில் பிஎன்ஆர் பார்க்கும் வசதி, ரயில்நிலையத்தில் நாம் பயணிக்க வேண்டியரயில்எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிவது, நடைபாதையைக் கண்டறிதல் உள்ளிட்ட சேவைகள் உள்ளன.

இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொலைப்பேசி எண்களையும் அந்த ஆப்ஸில் இருந்தபடியே அழைத்துப் பேச முடியும். குறிப்பாகப் பாதுகாப்பு எண்கள், சுத்தம் செய்யும் பணி, கேட்டரிங் வசதி உள்ளிட்டவற்றை பெறலாம். முதல்முறையாக தெற்கு ரயில்வே ரயில்களுக்காகவும், வணிக நோக்கத்துக்காகவும் சேர்த்து செயலியை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x