

பெங்களூரு நகரத்தின் துணை மேயரான ரமிலா உமாசங்கர், மாரடைப்பால் அக்டோபர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது 44.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அக்.3-ம் தேதி, ரமிலா துணை மேயராகப் பொறுப்பேற்றார்.
கோவிந்தராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதியின் காவேரிபுரா வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கவுன்சிலர் ரமிலா. அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் செப்டம்பர் 28-ம் தேதி துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி துணை மேயராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவில் நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தன்னுடைய குடும்பத்தினரை எழுப்பியுள்ளார் ரமிலா. இதனையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய மருத்துவர்கள், 2 மணிக்கு ரமிலா இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
முந்தைய நாளான நேற்று (வியாழக்கிழமை) துணை முதல்வர் ஜி.பரமேஸ்வராவுடன் கே.ஆர்.மார்க்கெட்டை ஆய்வு செய்த ரமிலா, முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.