Published : 19 Oct 2018 05:32 PM
Last Updated : 19 Oct 2018 05:32 PM
சபரிமலை கோயில் பாலியல் சுற்றுலாத் தலம் கிடையாது; அது ஐயப்பன் வசிக்கும் இடம் என்று முன்னாள் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனிடையே ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) சபரிமலைக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படும் நிலக்கல் பகுதியில் திரளாக நின்ற ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வாகனங்களை சோதனை செய்து, அதில் இளம் பெண்கள் இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதித்தனர்.
அதேபோல இன்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காவல்துறையின் பாதுகாப்போடு ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய பெண் பத்திரிகையாளர் கவிதா கோஷி மற்றும் பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா ஆகிய இருவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே கோயிலை நிர்வகித்து வரும் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து யோசித்து வருவதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரயார் கோபாலகிருஷ்ணன், '' சபரிமலைக்குப் பெண்கள் வருவது திட்டமிட்டு நிகழ்த்தப்படும் செயல். காவல்துறையும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் ஒன்றும் பாலியல் சுற்றுலாத் தலம் கிடையாது.
இந்த சன்னிதானம் கடவுள் ஐயப்பன் வசிக்கும் இடம்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT