Published : 02 Oct 2018 09:25 AM
Last Updated : 02 Oct 2018 09:25 AM
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வின் மகள், தன் தந்தையை சாதுர் யமாக பேசி பள்ளி விழாவுக்கு அழைத்துச் சென்றது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் மகள் டெல்லியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறாள். அந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் ‘தாத்தா பாட்டிகள்’ தின விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தாத்தா பாட்டிகளால் வர முடியாததால் அதற்கு, பதிலாக தனது தந்தை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை வருமாறு அழைத்து அவரை சமாதானம் செய்து பள்ளி விழாவுக்கு அழைத்துச் சென்று விட்டாள் மகள். இதை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டுள்ளார். படத்தில் பள்ளி வளாகத்தில் தனது மகளுடன் கிரண் ரிஜிஜு அமர்ந்திருக்கிறார். இத்துடன் தனது மகள் தன்னை சமாதானம் செய்து விழாவுக்கு கூப்பிட்ட வீடியோ காட்சியையும் அவர் பதிவு செய்துள்ளார்.
அதில், ‘‘தாத்தா பாட்டியால் தொலைவில் உள்ள கிராமத்தில் இருந்து டெல்லிக்கு வர முடியாது. எனவே, பள்ளி விழாவுக்கு நீங்கள் (கிரண் ரிஜிஜு) வாருங்கள்’’ என்று அமைச்சரை அவரது மகள் அழைக்கிறாள். ‘‘வர முயற்சிக்கிறேன். ஆனால், எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது’’ என்கிறார் கிரண் ரிஜிஜு. அதற்கு, ‘‘உங்கள் முதலாளியிடம் என் மகளின் பள்ளி விழாவுக்கு போகிறேன் என்று சொல்லுங்கள். அவர் ஒன்றும் சொல்லமாட்டார்’’ என்று சுட்டித்தனமாக பதிலளிக்கிறாள் மகள். இந்த வீடியோ காட்சியையும் மகளின் கோரிக்கையை ஏற்று, தான் பள்ளி விழாவுக்கு சென்றதையும் மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் கிரண் ரிஜிஜு. இந்த பதிவு சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT