Published : 14 Oct 2018 11:11 AM
Last Updated : 14 Oct 2018 11:11 AM

பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மனைவி சிகிச்சைப் பலனின்றி பரிதாப மரணம் ; மகன் உயிருக்குப் போராட்டம்

டெல்லி குருகிராமில் நேற்று மாலை நீதிபதியின் மனைவி, மகனைப் பட்டப்பகலில் துப்பாக்கியால், சுட்டு அவர்களின் பாதுகாவலர் இழுத்துச் சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவத்தில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தது கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகன் உயிருக்குப் போராடி வருவதாக குர்கவான் போலீஸ் செய்தித் தொடர்பாளர் சுபாஷ் போக்கன் தெரிவித்துள்ளார்.

டெல்லி குர்கவானில் கூடுதல் செசன்ஸ் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் கிருஷ்ண காந்த் சர்மா. இவரின் மனைவி ரிது(வயது38), மகன் துருவ்(வயது18). இவர்களின் குடும்பத்துக்கு கடந்த 2ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாவலராக பணியாற்றி வரும் போலீஸார் மஹிபால் சிங்.

இந்நிலையில், இன்று குர்கவானில் உள்ள பரபரப்பான செக்டர் 49 சாலையில் உள்ள ஆர்காடியா சந்தையில் நீதிபதியின் மனைவி, மகன் ஆகியோர் பொருட்கள் வாங்கிச் சென்றனர். அப்போது, பாதுகாவலருடன் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாதுகாவலர் மஹிபால் சிங் தான் வைத்திருந்த பிஸ்டலால் நீதிபதியின் மனைவி ரிது, மகன் துருவ் ஆகியோரைப் பட்டப்பகலில் அனைவரின் கண்முன் சுட்டார்.

மேலும் நீதிபதியின் மகன் துருவை தரதரவென சாலையில் இழுத்துவந்து தாங்கள் வந்திருந்த காரில் ஏற்றப் பாதுகாவலர் மஹிபால் முயன்றார். ஆனால், முடியவில்லை. இதையடுத்து காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

இந்த காட்சியைப் பார்த்த சாலையில் இருந்தவர்கள் அச்சத்தில் மிரண்டு நின்றனர். அதன்பின் போலீஸாருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து, குண்டுக் காயம் அடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இருவரும் ஆபத்தானநிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி மனைவி ரிது மரணமடைந்தார், மகன் துருவ் உயிருக்குப் போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x