Published : 31 Oct 2018 04:39 PM
Last Updated : 31 Oct 2018 04:39 PM

பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை எலி கடித்து பலியான பரிதாபம்

எலி கடித்ததால் பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது.

பிஹாரில் உள்ள தர்பாங்கா மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

திங்கட்கிழமை அன்று மூச்சுத்திணறல் காரணமாக தர்பாங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. அதையடுத்து அடுத்த நாள் காலையில் எலி கடித்ததால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துக் கூறிய குழந்தையின் தந்தை புரான் செளபால், அதிகாலையில் நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு செவிலியரோ, மருத்துவரோ இல்லை. குழந்தையின் கை மற்றும் கால்களில் நிறைய இடங்களில் எலி கடித்திருந்தது. உடனடியாக அதிகாரிகளிடம் இதைப் பற்றிக் கூறினோம். ஆனால் குழந்தை உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர் என்றார்.

ஆனால் இதை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், குழந்தை ஏற்கெனவே கவலைக்கிடமான நிலையில்தான் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் எலிகள் உள்ளதை ஒப்புக்கொண்ட நிர்வாகம், குழந்தையின் உடலில் எலிக்கடி ஏற்பட்ட தடயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x