Published : 05 Oct 2018 02:34 PM
Last Updated : 05 Oct 2018 02:34 PM

ரஷ்யாவிடம் இருந்து எஸ்- 400 ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து: அமெரிக்க மிரட்டலை புறக்கணித்தது இந்தியா

ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்- 400 ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று டெல்லியில் கையெழுத்தானது. பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

தரையிலிருந்து பாய்ந்து சென்று, எதிரி நாட்டு ஏவுகணை களை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட்டது. சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட்டது. ஆனால், ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ரஷ்யாவுடன் எவ்வித வர்த்தக உறவையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என நட்பு நாடுகளை வலியுறுத்தி உள்ளோம். இதை மீறும் நாடுகள் மீது புதிய சட்டத்தின்படி பொருளாதாரத் தடை விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் ஏவுகணையை வாங்க இந்தியா உறுதியாக உள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இன்று இரு தலைவர்களும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

அப்போது இரு நாடுகளுக் கிடையே சுமார் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, எஸ்-400 ஏவுகணை கொள் முதல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏவுகணைகள், 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும்.

இந்த ஏவுகணைகள் உலக அளவில் அதிநவீனமானவை. 2014-ம் ஆண்டு இந்த ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து சீனா முதன் முதலில் வாங்கியது. அதன் பிறகு இந்த ஏவுகணை வாங்க இந்தியா ஆர்வம் காட்டியது. ஆனால் அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x