Last Updated : 26 Oct, 2018 06:38 PM

 

Published : 26 Oct 2018 06:38 PM
Last Updated : 26 Oct 2018 06:38 PM

2 நாட்களில் 2 ஆயிரம் பேர் கைது: சபரிமலையில் போராட்டம் நடத்தியவர்களைக் குறிவைக்கும் கேரள போலீஸார்

சபரிமலையில் பெண்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களைக் குறிவைத்துள்ள போலீஸார், கடந்த 2 நாட்களில் 2 ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த 12 மணிநேரத்தில் மட்டும் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 700 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டக்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர்.

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது உள்ள பெண்கள் செல்ல அனுமதியில்லை எனும் பாரம்பரிய நடைமுறை நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால், கோயில் திறந்தபின் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள், பெண் சமூக செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு, திருப்பி அனுப்பிவிடப்பட்டனர்.

இந்தச் சூழலில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 200 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் கடந்த இரு நாட்களாக போலீஸார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இது குறித்து கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பேரா திருவனந்தபுரத்தில் இன்று கூறுகையில், சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதாகச் சந்தேகத்துக்குரிய 200 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம். அந்தப் புகைப்படங்கள் மாவட்ட வாரியமாக அனுப்பப்பட்டு கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 12 மணிநேரத்தில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டக்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்து வருகிறோம். இதுவரை 2 ஆயிரத்து 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

452 பிரிவின் கீழ் , 2300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கைது நடவடிக்கை வரும் காலத்திலும் தொடரும். இம்மாதம் நடந்த சம்பவம் போல் நவம்பர் 17-ம் தேதி மண்டலபூஜையின் போது சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக, சிறப்பு குழு அமைக்கப்படும்

கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதால், சிறை நிரம்பவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே சபரிமலையில் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக என்னமாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன், முதல்வர் பினராயி விஜயன் வரும் 29-ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். அந்தக் கூட்டத்தில் நடவடிக்கைகள் குறித்து விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காகக் கைது நடவடிக்கையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x