Published : 13 Oct 2018 08:03 PM
Last Updated : 13 Oct 2018 08:03 PM
டெல்லி குர்கவானில் இன்று நீதிபதியின் மனைவி, மகனைப் பட்டப்பகலில் துப்பாக்கியால், சுட்டு அவர்களின் பாதுகாவலர் இழுத்துச் சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி குர்கவானில் கூடுதல் செசன்ஸ் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் கிருஷ்ண காந்த் சர்மா. இவரின் மனைவி ரிது(வயது38), மகன் துருவ்(வயது18). இவர்களின் குடும்பத்துக்கு கடந்த 2ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாவலராக பணியாற்றி வரும் போலீஸார் மஹிபால் சிங்.
இந்நிலையில், இன்று குர்கவானில் உள்ள பரபரப்பான செக்டர் 49 சாலையில் உள்ள ஆர்காடியா சந்தையில் நீதிபதியின் மனைவி, மகன் ஆகியோர் பொருட்கள் வாங்கிச் சென்றனர். அப்போது, பாதுகாவலருடன் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாதுகாவலர் மஹிபால் சிங் தான் வைத்திருந்த பிஸ்டலால் நீதிபதியின் மனைவி ரிது, மகன் துருவ் ஆகியோரைப் பட்டப்பகலில் அனைவரின் கண்முன் சுட்டார்.
மேலும் நீதிபதியின் மகன் துருவை தரதரவென சாலையில் இழுத்துவந்து தாங்கள் வந்திருந்த காரில் ஏற்றப் பாதுகாவலர் மஹிபால் முயன்றார். ஆனால், முடியவில்லை. இதையடுத்து காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
இந்த காட்சியைப் பார்த்த சாலையில் இருந்தவர்கள் அச்சத்தில் மிரண்டு நின்றனர். அதன்பின் போலீஸாருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து, குண்டுக் காயம் அடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இருவரும் ஆபத்தானநிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், நீதிபதியின் மனைவியை மார்பிலும், மகனை தலையிடும் மஹிபால் சுட்டுள்ளார். இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#WATCH: Wife and son of an additional sessions judge shot at by the judge's gunman in #Gurugram's Sector-49. Both the injured have been admitted to the hospital and the gunman has been arrested. pic.twitter.com/rMqXdYHrxR
— ANI (@ANI) October 13, 2018
இது குறித்து குர்கவான் நகர போலீஸ் துணை ஆணையர் சுனில் குமார் கூறுகையில், செக்டர் 49 சாலையில் உள்ள ஆர்காடியா சந்தையில் பொருட்கள் வாங்க நீதிபதி குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது பாதுகாவலர் மஹிபாலுக்கும் அவர்களுக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அதில் மஹிபால் துப்பாக்கியால் இருவரையும் சுட்டுள்ளார். இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கியால் சுட்ட மஹிபால் போலீஸ் தலைமைக் காவலர். மகேந்கிரகார் பகுதி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர். இருவரையும் சுட்டுவிட்டு போலீஸ் நிலையத்தில் வரும் வழியில் மஹிபால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு மாஜிஸ்திரேட்டுக்கும் போன் செய்து உங்கள் மனைவியையும், மகனையும் சுட்டுவிட்டேன் என்று மஹிபால் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT