Published : 22 Oct 2018 02:06 PM
Last Updated : 22 Oct 2018 02:06 PM

அமிர்தசரஸ் ரயில் விபத்து: பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்கு இடையில் ரயில் சேவை தொடக்கம்

அமிர்தசரஸ் நகர், ஜோதா பதக்கில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 61 பேர் பலியானதை அடுத்து, அங்கே பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்கு இடையில் ரயில் சேவை தொடங்கியது

விபத்து நடந்து சுமார் 40 மணிநேரங்கள் கழித்து, அப்பகுதியில் போக்குவரத்து துவங்கியது.

முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை தசரா பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடந்தன. அதன் ஒருபகுதியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில் ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 60 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதனால் பொதுமக்களும், பலியானவர்களின் உறவினர்களும் விபத்து நடந்த பகுதியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் ஓட்டுநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி தண்டவாளத்தை மறித்தனர்.

 

சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பெரும் போலீஸ் படைகள் அங்கு நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர் ஒருவரும் பத்திரிகையாளரும் காயமடைந்தனர்.

நிலைமை சீரடைந்தபிறகு முதல் சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.16 மணியளவில் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அடுத்ததாக மாலை 4 மணிக்கு மற்றொரு ரயிலும் பயணித்தது. முன்னதாக சூழலைக் கண்காணிக்க பயணிகள் இல்லாத ரயில் சோதித்துப் பார்க்கப்பட்டது.

இன்று (திங்கள்) இரவுக்குள்ளாக ரயில் சேவை சகஜ நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x