Published : 31 Oct 2018 03:04 PM
Last Updated : 31 Oct 2018 03:04 PM
குஜராத் கெவாதியாவில் மிகப்பெரிய சர்தார் படேல் சிலையைத் திறந்து வைத்து பிரதமர் மோடி பேசிய போது சர்தார் படேல் இந்திய ஒற்றுமைக்காகப் போராடவில்லை எனில் ‘சிவபக்தர்கள்’ சோம்நாத் கோயிலில் பிரார்த்தனை செய்திருக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது சூசகமாகத் தாக்குதல் தொடுத்தார்.
“கற்பனை செய்து பாருங்கள், சர்தார் படேல் அன்று இந்திய ஒற்றுமைக்காக பாடுபடவில்லை எனில் கிர் காடுகளில் சிங்கத்தையும் புலியையும் பார்க்க வீசா தேவைப்பட்டிருக்கும், அதேபோல்தான் சிவபக்தர்கள் சோம்நாத் ஆலயத்தில் பூஜையைக் கண்டு களிக்க வீசா தேவைப்பட்டிருக்கும், ஹைதராபாத்தில் சார்மினாரைப் பார்க்க வீசா தேவைப்பட்டிருக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
சோம்நாத் கோயிலுக்கு ராகுல் காந்தி செல்வது குறித்து பிரதமர் மோடி முதல் முறையாகத் தாக்குதல் தொடுக்கவில்லை. குஜராத் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பாக கடந்த நவம்பரில் ராகுல் காந்தி சோம்நாத் கோயிலுக்கு வருகை தந்த போதும், பிரதமர் மோடி, ராகுல்காந்தியின் தாத்தா நேரு கோயிலை மறுகட்டுமானம் செய்யக் கூட விரும்பவில்லை, சர்தார்படேல்தான் சோம்நாத் கோயிலை மறுகட்டுமானம் செய்ய விழைந்தார், கஜினி மொகமதுவால் சூறையாடப்பட்ட கோயில் சோம்நாத் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது என்று பேசியிருந்தார் பிரதமர் மோடி.
“சர்தார் படேலுக்கு சிலை அமைப்பதை ஏதோ பெரிய குற்றம் இழைத்தது போல் நம் நாட்டிலேயே சிலர் பார்ப்பது விசித்திரமாக இருக்கிறது. இதனை அரசியலாக்குகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆளுமைகளை நினைவுச்சின்னங்களாக மாற்றுவது என்ன பெரிய குற்றமா?” என்று பிரதமர் சாடினார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மன்மோகன் வைத்யா கூறும்போது, “சர்தார் படேல் சிலை குறித்து அரசியல் செய்யக் கூடாது, இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம். சில சமயங்களில் மக்கள் அரசியலைக் கடந்து சிந்திக்க பழக வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT