Published : 31 Oct 2018 02:11 PM
Last Updated : 31 Oct 2018 02:11 PM
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் அதிகாலை மற்றும் இரவில் தலா ஒரு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், தீபாவளி நாளில் இரவு 8 முதல் 10 மணி வரையிலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாளில் இரவு 11.55 முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். காற்று மாசு, ஒலி மாசு அதிக அளவில் ஏற்படுத்தக்கூடிய மற்றும் திடக்கழிவு பிரச்சினையுள்ள பட் டாசு வகைகளைத் தடை செய்ய வேண்டும். உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்கின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இணையதளங்கள் வாயிலாக பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பது கண்டறியப்பட்டால், நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும். பட்டாசு வெடிப்பதில் எங்கேனும் விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலைய அலுவலரே பொறுப்பேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வகையான வழிகாட்டுதல்களைப் பிறப்பித்தனர்.
அதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பி.வினோத் கண்ணா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,''தீபாவளி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை தமிழகத்தில் அதிகாலை வேளையில் தொடங்கி காலை நேரங்களிலேயே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை மாலை நேரங்களில் கொண்டாடப் படுகிறது.
எனவே தீபாவளி பண்டிகையின்போது தமிழக மக்களின் கலாச்சார ரீதியாக அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரையில் காலையிலேயே 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதியளிக்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம், தமிழகம், புதுச்சேரி மற்றும் தென்னிந்திய மாநிலங்கள் அதிகாலையில் 4 மணியில் இருந்து 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் என மொத்தம் 2 மணி நேரங்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT