Published : 25 Oct 2018 05:43 PM
Last Updated : 25 Oct 2018 05:43 PM
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முசாபர்நகரில் பல நாட்களாக ஆயிரக்கணக்கான பெட்ரோலைத் திருடி வந்த கும்பலை இன்று (வியாழக்கிழமை) போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். இவர்களிடமிருந்து 14 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பல் போலீஸாரிடம் சிக்காமல் பலநாட்களாக தப்பிவந்ததது. இவர்கள் இதுவரை ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோல் பல்வேறு நூதன வழிகளில் திருடியுள்ளனர்.
மக்கள் தொடர்ந்து அளித்து வந்த புகாரை அடுத்து போலீஸார் அவர்களை எப்படியாவது கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று பலமுறை முயன்றனர்.
ஆனால் அவர்கள் பல்வேறு நூதன வழிகளில் திருட்டில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். இதற்காக மீரட் போலீஸார் ஒரு தனிப் படையை அமைத்து தொடர்ந்து தேடி வந்தனர்.
இதுகுறித்து மிரான்பூர் காவல்நிலைய சர்க்கிள் ஆபீசர் பிரிஜேஷ் சிங் தெரிவித்ததாவது:
இன்று கிடைத்த ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் மீரன்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிக்கெரா நகரத்திற்குச் சென்றனர். இங்குள்ள டெல்லி-பாவ்ரி தேசிய நெடுஞ்சாலையில் ஆயில் டேங்க்கர் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. டேங்கரின் மேல்பகுதியிலிருந்து பிளாஸ்டிக் டியூப் மூலம் ரகசியமாக திருடிக் கொண்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அவர்களை அங்கேயே போலீஸ்படை கையும் களவுமாக பிடித்தது. இதற்கு உடந்தையாயிருந்த டேங்க் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.
பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டு வந்த ஏழு பேர் தனுஷ்யந்த் குமார், சோனு, கவுரவ், யோகேஷ், கோபால், நிக்கு மற்றும் ஷாநவாஸ் என்று அடையாளங் காணப்பட்டனர். அவர்கள் பதுக்கிவைத்திருந்த 14 ஆயிரம் பெட்ரோலும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT