Last Updated : 01 Oct, 2018 07:32 PM

 

Published : 01 Oct 2018 07:32 PM
Last Updated : 01 Oct 2018 07:32 PM

‘தேர்தல் வாக்குறுதியைப் பற்றிக்கேட்டால் தேசவிரோதியா?’- பிரதமர் மோடியை விளாசிய சிவசேனா

2014-ம் ஆண்டு தேர்தலில் அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டால்கூட அவர்களை தேசவிரோதி என்று ஆளும் பாஜக கட்சி சித்தரிக்கிறது என்று சிவசேனா கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காக மக்களிடம் ஏராளமான பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ஆட்சிக்கு வந்தபின் நிழல்வாக்குறுதிகளாக மாறிவிடுகின்றன. இதுபோன்ற ஒழுக்கநெறிமுறைக்கு மாறாக வாக்குறுதி அளிக்கப்படுவதைத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு இல்லாவிட்டால் புரட்சி வெடித்துவிடும்.

மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையர் ஜே.எஸ். சஹாரியா சமீபத்தில் கூறுகையில், தேர்தல் நேரத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றாமல் இருந்தால் வாக்குறுதி அளித்த அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதியைத் தேர்தல் ஆணையமும் நிறைவேற்ற வேண்டும்.

அரசியல் கட்சிகள் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு அரசியல் கட்சிகள் அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தி விட்டதா என்பதை தேர்தல் ஆணையமும் கவனித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி ஏராளமான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார். பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீரை மீட்பேன், கறுப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவேன், ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார்.

இப்போது மோடியிடம் யாரேனும் சென்று நீங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று என்று கேட்டால், அவர்கள் மீது தேசத் துரோகி முத்திரை குத்தப்படுகிறது.

இவ்வாறு சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x