Published : 27 Oct 2018 09:05 AM
Last Updated : 27 Oct 2018 09:05 AM
மிசோரம் மாநில சட்டப் பேரவைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மொத்தம் 40 பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2013-ல் நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
கடந்த தேர்தலில் மிசோரம் தேசிய முன்னணி, பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது. அப்போது அந்தக் கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மிசோரம் தேசிய முன்னணி (எம்என்எப்) அறிவித்துள்ளது.
இதுகுறித்து எம்என்எப் கட்சியின் தகவல் மற்றும் விளம்பரப்பிரிவு செயலர் லால்தான்சுவாலா நாம்டே நேற்று கூறும்போது, “வரும் தேர்தலில் பாஜகவும், எம்என்எப்-பும் மீண்டும் கூட்டணி அமைக்கின்றன என்ற செய்திகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. அது உண்மையல்ல. பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.
எம்என்எப்-புடன் கூட்டணி கிடையாது என்று திரிபுராவைச் சேர்ந்த பாஜக தலைவர் பிரதிமா பவுமிக் வெளியிட்டுள்ளார். ஆனால் எம்என்எப் கட்சியின் புகழைக் கெடுக்க சதி செய்யும் வகையில் இந்தச் செய்தியை திரித்து வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் எம்என்எப் தனியாகப் போட்டியிடும். எந்தக் கட்சியுனும் கூட்டணி வைக்காது என்று கட்சியின் தலைவர் சோரம்தாங்கா தெளிவாக அறிவித்துள்ளார். இதேபோலவே பாஜக தலைவர் அமித் ஷா அண்மையில் மிசோரம் வந்திருந்தபோது, பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்திருந்தார். தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது தேர்தலுக்குப் பிறகோ பாஜகவுடன் எம்என்எப் கூட்டணி வைக்காது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT