Published : 19 Oct 2018 11:43 AM
Last Updated : 19 Oct 2018 11:43 AM

வலுக்கும் போராட்டம்: பம்பைக்கு திருப்பி அனுப்பப்படும் இரு பெண்கள்

சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தை நெருங்கிய இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்ட நிலையில், அவர்கள் காவல்துறையின் பாதுகாப்போடு சபரிமலையில் இருந்து கீழே இறங்கி, பம்பை திரும்புகின்றனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இதை அமல்படுத்தப் போவதாக அறிவித்த கேரள கம்யூனிஸ்ட் அரசு, ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கும்போது பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது.

ஆனால், தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், கோயில் தந்திரிகள், இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்துவோம் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் கவிதாவும், பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் வந்தடைந்தனர். ரஹானா பாத்திமா இருமுடி கட்டிய பக்தராக சபரிமலை சன்னிதானத்தை கவிதாவுடன் நெருங்கினார். ஆனால், இவர்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் சன்னிதானம் அருகே சரணகோஷம் எழுப்பினர். 18-ம் படியின்கீழ் அர்ச்சகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தை நடத்திவரும் ஐயப்ப பக்தர்கள், அர்ச்சர்கர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் சபரிமலை கோயில் சன்னிதானத்தை நெருங்கிய இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பெண்கள் இருவரும் பம்பைக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதுகுறித்துக் கூறிய கேரள ஐஜி ஸ்ரீஜித், ''பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா இருவரையும் சன்னிதானத்துக்கு அருகில் அழைத்துச் சென்றோம். ஆனால் கோயில் தந்திரியும் அர்ச்சகர்களும் கோயிலுக்குள் நுழைய விடவில்லை. நாங்கள் உள்ளே செல்ல முயற்சித்தால் கோயில் பூட்டப்படும் என்று தெரிவித்தனர்.

நாங்கள் சன்னிதானம் வரை முழு பாதுகாப்புடன் அழைத்து வந்தோம். ஆனால் தரிசனம் என்பது அர்ச்சகர்களின் ஒப்புதலில்தான் நடைபெற முடியும்.

இந்த சூழல் குறித்து அவர்களிடம் கூறினோம். பெண்கள் இருவரும் சபரிமலையில் இருந்து இறங்க சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து இருவரும் பம்பை திரும்புகின்றனர். அவர்களுக்குத் தக்க பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x