Published : 09 Oct 2018 05:05 PM
Last Updated : 09 Oct 2018 05:05 PM

‘‘மோடிக்கு வாக்களித்தவர்கள் தாக்கப்படுகிறார்கள்; குஜராத் அரசு வேடிக்கை பார்க்கிறது’’ - மாயாவதி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியை வாரணாசியில் வெற்றி பெற செய்த மக்கள் குஜராத்தில் தாக்கப்படுகிறார்கள், ஆனால் அம்மாநில பாஜக அரசோ வேடிக்கை பார்க்கிறது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஹிம்மத்நகர் அருகே இருக்கும் கிராமத்தில் 14 மாத பெண் குழந்தையை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இந்தப் பலாத்காரத்தில் ஈடுபட்டது பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிந்திர சாஹு என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து குஜராத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாயாவதி கூறியதாவது:

‘‘குஜராத்தில் கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது மிகவும் வருந்ததக்கது. இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்யக்கூடாது. பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி பெற வாக்களித்த மக்கள் தற்போது குஜராத்தில் தாக்கப்படுகிறார்கள். ஆனால் குஜராத் பாஜக அரசு, இதனை வேடிக்கை பார்க்கிறது. வட மாநிலத்தவர்கள் வெளிநாட்டவர் அல்ல. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குஜராத் அரசின் கடமை’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x