Last Updated : 11 Oct, 2018 10:06 PM

 

Published : 11 Oct 2018 10:06 PM
Last Updated : 11 Oct 2018 10:06 PM

எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகள்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் இருக்கும் புதிய கிரிமினல் வழக்குகள் குறித்த துல்லியமான தகவல்களை அளிக்கும்படி 20 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்கள் கண்காணித்து விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்றும், 2 வார கால அவகாசத்தையும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.

பாஜக நிர்வாகி அஸ்வினி உபாத்யாய என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், குற்ற வழக்கில் சிறைதண்டனை பெற்று தண்டனை முடிந்து திரும்பும் அரசியல்வாதிகள், அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டவிதிகளை அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமாகச் சேர்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த வழக்கை கடந்த நவம்பர் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், 2014-17 ஆம் ஆண்டு காலத்தில் தற்போதைய, முன்னாள் எம்.பி.,எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட கிரிமினல் வழக்குகள் குறித்த தகவலை அளிக்கும்படி கேட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தபோது, 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மட்டும் இந்தத் தகவலை உச்ச நீதிமன்றத்தில் அளித்திருந்தன.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

''எம்எல்ஏக்கள், எம்.பி.,க்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை மாநில அரசுகள் தாக்கல் செய்யும் வரை மத்திய அரசு காத்திருக்காமல், நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்கத் தேவையான விரைவு நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் உதவி செய்ய மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை உதவியாக நீதிமன்றம் நியமிக்கிறது. எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் இருக்கும் அனைத்து வழக்குகளின் விவரங்களையும் அடுத்த 2 வாரங்களுக்குள் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தாக்கல் செய்ய வேண்டும். எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன, எத்தனை வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்பதையும் உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்''.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x