Published : 10 Oct 2018 08:08 AM
Last Updated : 10 Oct 2018 08:08 AM
வரலாற்று புகழ்மிக்க மைசூரு தசரா திருவிழாவை எழுத்தாளர் சுதா நாராயண மூர்த்தி இன்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, அரண் மனை, சாமுண்டி மலை உள்ளிட்ட இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் மைசூரு மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
கடந்த 1610-ம் ஆண்டு விஜய நகர ஆட்சியில் தொடங்கப்பட்ட மைசூரு தசரா திருவிழா, மைசூரு உடையார் மன்னர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படு கிறது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, கடந்த 1972-ம் ஆண்டு முதல் கர்நாடக அரசு சார்பில் மைசூரு மன்னர் குடும்பத்தின் ஒத்துழைப்போடு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு விஜயதசமியை முன்னிட்டு இன்று ( 10-ம் தேதி) முதல் 19-ம் தேதி வரை 10 நாட்கள் இத்திருவிழா நடைபெறுகிறது. 408-வது ஆண்டு தசரா விழாவை இன்று காலை முதல்வர் குமாரசாமி முன்னிலையில் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவியும், எழுத்தாளருமான சுதா தொடங்கி வைக்கிறார். மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்வதன் மூலம் தசரா விழா தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT