Last Updated : 09 Oct, 2018 08:30 PM

 

Published : 09 Oct 2018 08:30 PM
Last Updated : 09 Oct 2018 08:30 PM

தி# மீடூ குரல்- மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்: வரிந்து கட்டும் காங்கிரஸ்

தி# மீடூ குரல் பாலிவுட் திரைப்படத்துறையை மட்டும் உலுக்கி வந்த நிலையில், மத்திய அமைச்சரவையையும் அதிரவைத்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், தி#மீடூ(The #MeToo ) இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். இதில் இந்தி திரையுலகில் பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சிக்கி வருகின்றனர்.

இதில் மத்திய அமைச்சர் ஒருவர் மீதும் பாலியல் புகாரை இரு பெண் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பிரியா ரமணி மற்றும் மற்றொரு பத்திரிகையாளர் ஒருவரும் புகார் தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ஏறக்குறைய 40 ஆண்டுகால பத்திரிகை அனுபவம் கொண்டவர். பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் தன்னுடைய காலத்தில் இந்த இரு பெண் பத்திரிகையாளர்களிடம் தவறாக நடந்துள்ளதாக அவர்கள் தி#மீடூ இயக்கத்தில் புகாராகத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கேட்டபோது, அது குறித்து கருத்துக் கூற அவர் மறுத்துவிட்டார். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் மீதே இருபெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, 70 உறுப்பினர்கள் கொண்ட குழுவோடு நைஜீரியா நாட்டுக்கு ஒரு மாநாட்டுக்காக மத்தியஅமைச்சர் அக்பர் சென்றுள்ளார். நாளைதான் அந்தக்குழுவினர் இந்தியா திரும்புகின்றனர். இந்த விவகாரம் குறித்து இதுவரை எம்.ஜே.அக்பர் எந்தவிதமான கருத்தும் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிடவில்லை.

தி#மீடூ இயக்கம் குறித்து பாஜக அமைச்சர்கள் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். மத்திய அமைச்சர் மேனகா காந்தி இந்த திமீடு இயக்கத்துக்கு ஆதரவுதெரிவித்து, குற்றம்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால், பாஜக எம்.பி. உதித் ராஜ் இந்த திமீடூ இயக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை இப்போது ஏன் பெண்கள் வெளிப்படுத்துகிறார்கள். இது தவறான செயல். பொதுவாழ்க்கையில் உள்ளவர்களைக் களங்கப்படுத்தும் முயற்சி என்று தெரிவித்துள்ளார்.

பாலியல் புகாருக்கு ஆளான மத்திய அமைச்சர் அக்பர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ்கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறுகையில், இது உண்மையில் மிகவும் கவலைப்படவேண்டிய விஷயம். இதுதொடர்பாக அமைச்சர் தனதுவிளக்கத்தை அளிக்க வேண்டும். அமைதியாக இருப்பது எதற்கும் தீர்வாகாது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அமைச்சர் அக்பர் மீது பிரதமர் மோடி விசாரணை நடத்த வேண்டும். அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x