Published : 13 Oct 2018 04:26 PM
Last Updated : 13 Oct 2018 04:26 PM

பட்டினிக் குறியீட்டில் இந்தியா படுமோசம்; நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைஎடை கொண்டவர்கள்; ஜிஎச்ஐ வெளியீடு

உலக பட்டினிகுறியீட்டில் 119 நாடுகளில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி 103வது இடத்தில் பின்தங்கியுள்ளது, நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்கள் என்றும் உலக பட்டிணி குறியீடு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதாவது நாட்டில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சரிவிகித சத்தான உணவு இல்லை, அந்தக் குழந்தையும் தனது உயரத்துக்கு ஏற்ற எடைகொண்டதாக இல்லை என்று 2018-ம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான நிலையில், சரிவிகித சத்துணவு இல்லாமல் தெற்கு சூடான் நாட்டில் உள்ள குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

119 நாடுகளை எடுத்துக்கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா 103 இடத்துக்குப் பின்தங்கி மிகவும் தீவிரமாக, கவலைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 3 இடங்கள் கீழிறங்கியுள்ளது.

பட்டினி குறீயிட்டை கணக்கிடுவதற்கு நான்கு முக்கியக் காரணிகள் கணக்கிடப்படுகின்றன. முதலாவதாக ஒரு குழந்தைக்கு தேவையான சத்துள்ள, சரிவிகித கிடைக்கிறதா அல்லது சத்துள்ள உணவு இல்லாமல் இருக்கிறதா என்பதை அறிவதாகும்.

2-வதாக 5 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். அதில் இந்த 5 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் தங்கள் உயரத்துக்கு ஏற்ப எடை கொண்டிருக்கிறார்களா, தங்கள் வயதுக்கு ஏற்ப உயரத்தைக் கொண்டிருக்கிறார்களா என்பதை அறிவதாகும். இவை இரண்டுக்கும் சரிவிகித சத்துணவு இல்லாமல் இருப்பது காரணமாகும். இறுதியாகக் குழந்தை இறப்பு. இந்த 4 காரணிகளால் கணக்கிடப்படுகிறது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக 3 விஷயங்களில் மட்டும் முன்னேறி வருகிறது. கடந்த 2000-ம் ஆண்டில் சத்துக்குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அளவு கடந்த 18 ஆண்டுகளில் குறைந்துள்ளது. அதாவது கடந்த 2000ம் ஆண்டில்18.2 சதவீதத்தில் இருந்து 2018-ம் ஆண்டில் 14.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பச்சிளங் குழந்தைகள் இறப்பு 9.2 சதவீதத்தில் இருந்து 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகள் அளவு 54.2 சதவீதத்தில் இருந்து 38.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அதேசமயம், “சைல்ட் வாஸ்டிங்” எனச் சொல்லக்கூடிய உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அளவு அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷமாக இருக்கிறது.

கடந்த 2000-ம் ஆண்டில் 17 சதவீதமாக இருந்த நிலையில், 2005-ல் 20 சதவீதமாகவும், 2018-ல் 21 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. தெற்கு சூடானில் இது 28 சதவீதமாகவும் இருக்கிறது.

குழந்தைகளின் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருக்கும் குறைபாடு என்பது தெற்காசியாவில் பரவலாக இருக்கிறது, இது உடனடியாக கவனத்தில் கொண்டு களையப்பட வேண்டிய விஷயம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்தக் குறைபாட்டை சிறுவயதில் இருந்தே தடுக்க குழந்தைகளுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுதலைக் கட்டாயப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், பெண்கள் தங்களின் பேறுகாலத்தில் போதுமான சத்துள்ள உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் முறையாகக் கொடுக்காமல் இருப்பதாலும் இந்த வயதுக்கு ஏற்ற எடை இல்லா குழந்தைகள் உருவாக காரணமாகக் கூறப்படுகிறது.

தெற்காசியாவில் குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் பிரச்சினைக்கும் சுகாதாரமான குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

ஏழ்மையை நிலையைக் குறைப்பதால் மட்டும் இந்தக் குறைபாட்டை நீக்கிவிட முடியாது. மாறாக, குழந்தைகளுக்கும், மகப்பேற்றில் உள்ள பெண்களுக்கு சத்துள்ள, சரிவிகித உணவு கிடைப்பதை உறுதி செய்தல், சுத்தமான கழிப்பிட வசதிகள் செய்தல், பெண் கல்வி, பாதுகாப்பான குடிநீர், பாலின சமத்துவம், நாட்டில் போதுமான உணவு அனைவருக்கும் கிடைக்க உறுதி செய்தலும் அவசியமாகும்.

சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் தீவிரமான முயற்சிகள் எடுத்து பட்டினிக்குறியீட்டில் தங்கள் நிலையை உயர்த்தி வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் நாடுகளின் நிலையில் முன்னேற்றம் தென்படுகிறது. ஆனால், 50 நாடுகள் 2030-ம் ஆண்டுக்குள் குறைந்த பட்டினி குறியீடு என்ற இடத்தைத் தக்கவைக்காது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

                                                                                                     தமிழில்: கே. போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x