Published : 17 Oct 2018 05:13 PM
Last Updated : 17 Oct 2018 05:13 PM
கர்நாடக மாநிலத்தில் 3 மக்களவை மற்றும் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக தனித்தும், காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. இதில் மூன்று முன்னாள் முதல்வர்களின் மகன்களும், முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதாவும் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மண்டியா, ஷிமோகா, பெல்லாரி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக தனித்தும், காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பாஜக மற்றும் காங்கிரஸ், மஜத வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மஜத சார்பில் மண்டியா, ஷிமோகா மக்களவைத் தொகுதிகளில் முறையே சிவராம கவுடாவும், முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பாவும் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் பெல்லாரி மக்களவைத் தொகுதியில் உக்ரப்பாவும், ஜம்கண்டி சட்டப்பேரவை தொகுதியில் ஆனந்த் நியாம கவுடாவும் போட்டியிடுகின்றனர். ராம்நகர் தொகுதியில் மஜத சார்பில் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா நிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக சார்பில் ஷிமோகா, மண்டியா, பெல்லாரி மக்களவைத் தொகுதிகளில் முறையே முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி சித்தராமையா, முன்னாள் எம்.பி. சாந்தா போட்டியிடுகின்றனர். ஜம்கண்டி, ராம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் முறையே ஸ்ரீகாந்த் குல்கர்னி, சந்திர சேகர் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர்களான பங்காரப்பா, எடியூரப்பா, ஜே.ஹெச். படேல் ஆகியோரின் மகன்கள் மது பங்காரப்பா (மஜத), ராகவேந்திரா (பாஜக), மது படேல் (ஐக்கிய ஜனதா தளம்) ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். மூன்று முன்னாள் முதல்வர்களின் மகன்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் ஷிமோகாவில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் காங்கிரஸ், மஜத, பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளன. இதனால் தேசியத் தலைவர்களும், மாநில அளவிலான மூத்த தலைவர்களும் இடைத்தேர்தல் நடக்கும் இடங்களில் முகாமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT