Published : 01 Oct 2018 06:29 PM
Last Updated : 01 Oct 2018 06:29 PM
தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கடும் எதிர்ப்புக்கு ஆளாகி வரும் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ், பிரதமர் மோடியின் சகோதரர்களில் ஒருவர் ஆட்டோ ஓட்டுவதாகவும் இன்னொருவர் மளிகைக் கடை வைத்திருப்பதாகவும் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான துல்லியத் தாக்குதல் இரண்டாம் ஆண்டு விழா அகர்தலாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிப்லப், ''மோடியின் சகோதரர் இன்னும் ஆட்டோ ஓட்டுகிறார். மற்றொரு சகோதரர் மளிகைக் கடை வைத்திருக்கிறார்.
பிரதமர் மோடி தனது தாயை பிரதமர் இல்லத்தில் தங்கவைக்கவில்லை. அவரின் தாய் 10*12 அடி அறையில் வசிக்கிறார். அத்தனை எளிமையானவர் மோடி'' என்று தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக பிப்லப் குமார் தேவ் இருந்து வருகிறார். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி சிக்கிக் கொள்வதையே அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் வந்துவிட்டது என்று பிப்லப் பேசினார், அதன்பின், சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று பேசினார். இவரின் பேச்சு பாஜகவுக்குப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. பிப்லப்பை நேரில் அழைத்து பிரதமர் மோடி கண்டித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அவர் மனம்போல் பேசி வருகிறார். வேலையில்லாத இளைஞர்கள் அரசு வேலைக்காகக் காத்திருக்காமல் வெற்றிலைப் பாக்கு கடை வைக்கலாம், அல்லது மாடு மேய்க்கலாம் அவ்வாறு செய்தால், நல்ல ஊதியம் ஈட்ட முடியும் என்று பேசினார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த 1913-ம் ஆண்டு ரவிந்திரநாத் தாகூர் நோபல் பரிசை திருப்பிக் கொடுத்தார் எனப் பேசினார். அதேபோல வாத்துகள் நீந்தினால் தண்ணீர் சுத்தமாகும், ஆக்ஸிஜன் அதிகமாகும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், மீண்டும் பிப்லப் குமார் பிரதமர் மோடியின் சகோதரர்களில் ஒருவர் ஆட்டோ ஓட்டுவதாகவும் இன்னொருவர் மளிகைக் கடை வைத்திருப்பதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
திரிபுரா முதல்வரின் கருத்துகளைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT