Published : 19 Oct 2018 04:39 PM
Last Updated : 19 Oct 2018 04:39 PM

‘சபரிமலை சுற்றுலாத் தலம் அல்ல; அனைத்து மதத்தினரும் அங்கு செல்வது கவலை தருகிறது’- காங்கிரஸ் தலைவர் காட்டம்

சபரிமலை சுற்றுலாத் தலம் அல்ல; அனைத்து மதத்தினரும் அங்கு செல்வது கவலை தருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) சபரிமலைக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படும் நிலக்கல் பகுதியில் திரளாக நின்ற ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வாகனங்களை சோதனை செய்து, அதில் இளம் பெண்கள் இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

அதேபோல இன்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காவல்துறையின் பாதுகாப்போடு ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய இரண்டு பெண்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் சென்னிதாலா, ''சபரிமலை சுற்றுலாத் தலம் கிடையாது. அங்கு பக்தர்கள் மட்டுமே செல்ல வேண்டும். இந்துக்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினரும் ஐயப்பன் கோயிலுக்குச் செல்கிறார்கள். இது அனைவருக்கும் கவலை அளிக்கிறது. கேரள காவல் துறையின் போக்கு கவலை தருகிறது. சன்னிதானம் சென்ற பெண்களுக்கு காவல்துறையின் சீருடை அளிக்கப்பட்டது தவறு.

ஆளுநரைச் சந்தித்து தற்போதைய சூழ்நிலை குறித்து விளக்கியுள்ளோம். நாங்கள் இங்கு ஆட்சியில் இருந்திருந்தால், இந்த சூழலைத் திறம்படக் கையாண்டிருப்போம். பக்தர்களுடன் பேசி, வன்முறையற்ற நிலையை உருவாக்கி இருப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x