Published : 03 Oct 2018 02:02 PM
Last Updated : 03 Oct 2018 02:02 PM

பாலியல் பலாத்காரப் புகார்: பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு

கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ மூலக்கலுக்கு ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

பிராங்கோவின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ராஜா விஜயராகவன், ''சமூகத்தில் உயரிய நிலையில் இருக்கும் ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளைக் கலைத்துவிடக் கூடும்'' என்று கூறி ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டார்.

மூலக்கல்லின் கைதுக்குப் பிறகும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராங்கோ மூலக்கல் தற்போது கோட்டயம், பாலா துணை சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார். கோட்டயம் அருகிலுள்ள பாலா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூலக்கல்லின் ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து, அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது?

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றியவர் பாதிரியார் பிராங்கோ மூலக்கல். இவர் தான் பணியாற்றிய காலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி அப்போது தேவாலய நிர்வாகிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி குருவிளங்காடு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் பிராங்கோ தனது பதவியைப் பயன்படுத்தி கன்னியாஸ்திரிகளிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்தது.

ஆனால், புகார் அளித்தும் 70 நாட்கள் ஆகியும் பிஷப் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டி கன்னியாஸ்திரிகள் 5 பேர் 14 நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து கோட்டயம் போலீஸ் எஸ்.பி.ஹரி சங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மூன்று நாள் தொடர்ந்த விசாரணையில் பிராங்கோ மூலக்கல்லைக் கைது செய்ய முடிவெடுக்கப்பட்டது. நாட்டிலேயே முதல் முறையாக பலாத்காரக் குற்றச்சாட்டில் பிஷப் ஒருவர் கைது செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x