Published : 04 Oct 2018 08:41 AM
Last Updated : 04 Oct 2018 08:41 AM

தெலங்கானா பழங்குடி கிராமத்தில் விஷம் குடித்த மனைவியை காப்பாற்ற 3 கி.மீ. தூரம் தோளில் தூக்கி சென்ற கணவன் 

தெலங்கானா மாநிலத்தில் விஷம் குடித்த மனைவியை காப்பாற்ற அவரை கணவர் தனது தோளில் சுமந்து மருத்துவமனைக்கு 3 கி.மீ. தூரம் ஓட்டமும் நடையுமாகச் சென்றார். ஆனால், வழியிலேயே அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலம், கும்ரம்பீம் ஆசிஃபா பாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடி இன பகுதியில் வசிப்பவர் ராத்தோட் ராம் (35). இவரது மனைவி புஷ்பலதா (30). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த ராம் ஜாதவ் என்பவரிடம், 5 ஏக்கர் விவசாய நிலத்தை ஒப்பந்தத்திற்கு எடுத்த இந்த தம்பதியினர், சில மாதங்களுக்கு முன் சிலரிடம் கடன் வாங்கி, பருத்தி விதைத்தனர். ஆனால், சமீபத்தில் பெய்த மழையால், பருத்தி செடி முழுவதும் நாசமானது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, விவசாய நிலத்திற்கு சென்ற ராத்தோட் ராமும், அவரது மனைவி புஷ்பலதாவும், மழையால் பாதிக்கப்பட்ட அவர்களது நிலத்தைக் கண்டு மனமுடைந்தனர். அப்போது, நிலத்தில் இருந்த பூச்சி மருத்தை எடுத்து திடீரென குடித்து தற்கொலைக்கு முயன்றார் புஷ்பலதா. இதனை கண்டு பதறிபோன அவரது கணவர் ராத்தோட் ராம், உடனடி யாக தனது மனைவியை தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவ மனைக்கு சுமார் 3 கி.மீ தூரம் வரை, ஆற்றிலும், ஒற்றையடி பாதையிலும் ஓட்டமும் நடையுமாகச் சென்றார். இப்பகுதியில் சாலை வசதி இல்லாததே இதற்கு காரணமாகும்.

3 கி.மீ தூரம் சென்றபின்னர், தார் சாலையில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவில், தனது மனைவியை நார்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு புஷ்பலதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்த னர்.

இது குறித்து தகவல் அறிந்த நார்னூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக இவர்கள் வசிக்கும் பழங்குடி இன கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் இது போன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்ற னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x