Published : 16 Oct 2018 03:26 PM
Last Updated : 16 Oct 2018 03:26 PM

சபரிமலை பேச்சுவார்த்தை தோல்வி; மன்னர் குடும்பம் அதிருப்தி

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்படும் நிலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுமுதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலைஐயப்பயன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் சென்று சாமிதரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு கேரளாவில் உள்ள பந்தம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர், மற்றும் பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாஜக, இந்து அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதனால் கேரள அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்பட உள்ளது.

இதையொட்டி சபரிமலை விவகாரத்தில் சுமூகமான முடிவை எட்ட திருவாங்கூர் தேவசம் போர்டு போராட்டம் நடத்தி வரும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தது. அதன்படி திருவாங்கூர் தேசவம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது.

பந்தளம் அரச குடும்பம், தந்திரிகள், பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பின்னர் இதுகுறித்து பந்தளம் அரண்மனை சார்பில் பங்கேற்ற சசிக்குமார் வர்மா கூறுகையில் ‘‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்வது பற்றி அக்டோபர் 19-ம் தேதி விவாதிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். இன்று நடந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையவில்லை. எங்களுடைய கோரிக்கைகளை ஏற்க அவர்கள் தயாரில்லை’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x