Published : 29 Aug 2018 05:03 PM
Last Updated : 29 Aug 2018 05:03 PM
வங்கியில் ஆதார் அட்டை இல்லை என்று சொன்னததற்காக ஏற்பட்ட விவாதத்தில் சகோதரரைக் கன்னத்தில் அறைந்த போலீஸை ஒரு பெண் தனது காலணியால் அடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் மாவட்டத்தில் லோனி பல்ராம் நகர் காலனியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் நேற்று முன்தினம் இச்சம்பவம் நடந்துள்ளது.
வங்கியில், ஆதாரைப் பதிவு செய்ய அடையாள அட்டை வேண்டும் என்று இம்ரானிடம் கேட்கப்பட்டது. அவர் மறுத்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரி அப்படியென்றால் வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் வெடித்தது. அதைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
ஒரு போலீஸ்காரர் அங்கு வந்ததும் அவரும் வங்கியின் செக்யூரிட்டி ஊழியரும் சேர்ந்து இம்ரானை வங்கி வளாகத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
அதுமட்டுமின்றி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் போன்செய்து அங்கே, போலீஸ் வேன் ஒன்றும் வரவழைக்கப்பட்டது.
இதற்கிடையில் வங்கி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இம்ரான், உடனே தனது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு போன் செய்துள்ளார். அவர்களும் அங்கு வந்தனர். அப்போது மேலும் வாதம் தொடர்ந்தது.
இதனால் போலீஸார் இம்ரானை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இம்ரானின் சகோதரி தனது காலில் அணிந்திருந்த காலணியை எடுத்து அந்த போலீஸாரை அடித்துள்ளார். இக்காட்சி வீடியோவில் பதிவாகி அது சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டதாக போலீஸ் எஸ்எஸ்பி வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார்.
இச்சம்பத்தின் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததில் தொடர்புடைய அசோக் விகார் காலனியைச் சேர்ந்த ரஷீத் மற்றும் இஸ்மாயில் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய மற்றவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT