Published : 29 Aug 2018 03:52 PM
Last Updated : 29 Aug 2018 03:52 PM
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி, 9 சதவீதமாக வழங்க அளிக்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டநிலையில், 4 மாதங்களில் மீண்டும் 2 சதவீதம் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி ஜூலை மாதம் முன்தேதியிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசில் பணியாற்றும் 48 லட்சம் அரசு ஊழியர்கள், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,112.20 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT