Published : 02 Aug 2018 12:20 PM
Last Updated : 02 Aug 2018 12:20 PM

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை; ஒரே குழியில் 4 உடல்கள்: போலீஸ் விசாரணை

 கேரள மாநிலம் இடுக்கியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டு, அனைவரது உடல்களும் ஒரே குழியில் அடுக்கி வைக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முந்தன்முடி தேயிலைத் தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 52). இவர் தனது மனைவி சுசீலா (வயது 50), மகள் அர்ஷா (வயது 21), மகன் அர்ஜுன் (19) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். மாந்திரீகத்தில் ஆர்வம் கொண்ட கிருஷ்ணன் அதுதொடர்பாக சிலரை அழைத்து வந்து அவ்வப்போது ஆலோசனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக கிருஷ்ணனும் அவரது குடும்பத்தினரும் விட்டை விட்டு வெளியே வரவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் அதிகம் பழக்கம் இல்லாத அந்தக் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. எனினும் அவர்கள் வீட்டிற்கு நாய், காகம் போன்றவை அதிகஅளவில் சென்ற வண்ணம் இருந்ததால் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து உள்ளூர் போலீஸாருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து போலீஸார் வந்து சோதனையிட்டபோது அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் பின்புறம் உள்ள குழியில் கிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேரின் உடல்களும் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டன. அழுகி துர்நாற்றம் வீசிய அந்த உடல்கள் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. வீட்டின் சுவர்களில் ரத்தக் கறை, கத்தி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

மாந்திரீகத்தில் நம்பிக்கையுள்ள கிருஷ்ணன் உள்ளிட்ட நால்வரும் மூட நம்பிக்கையில் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது அவர்களை யாரும் கொலை செய்தார்களா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும் வீட்டில் சில பூஜைப் பொருட்களும், மாந்திரீகம் தொடர்பான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் மரணத்துடன் மாந்திரீக தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மாந்திரீகம் செய்ததாகக் கூறி கிருஷ்ணன் அவ்வப்போது சில பூஜைகள் செய்வதாகக் கூறப்படுகிறது. மேலும் மை வைத்துப் பார்க்கும் மாந்திரீகத்திற்காக சிலர் அவ்வப்போது அவரது வீட்டிற்கு வந்துபோயுள்ளனர்.

டெல்லியில் அண்மையில் மூட நம்பிக்கை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவிலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x