Last Updated : 28 Aug, 2018 09:54 PM

 

Published : 28 Aug 2018 09:54 PM
Last Updated : 28 Aug 2018 09:54 PM

‘கேரளாவுக்கு உதவி செய், ஜாமீன் வழங்குகிறேன்’: ஜார்கன்ட் உயர் நீதிமன்ற நீதிபதி வித்தியாசமான உத்தரவு

முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்து இருந்த 3 பேரிடம், கேரளாவுக்கு உதவி செய்ய பணத்தை முதல்வர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்த பின் மனுவை பரிசீலிப்பதாக ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

கேரள மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழைக்கு 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மழை நின்று, வெள்ளம் வடிந்ததால்,மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். கேரள மாநிலம் மீண்டுவர பல்வேறு மாநிலங்கள் தரப்பிலும், தனிநபர்கள், தன்னார்வ அமைப்புகள் தரப்பிலும் நிதியுதவி, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூட பாட்டுபாடி ரூ.10 லட்சம் நிதிதிரட்டி கேரள அரசுக்கு நிதியுதவியாக அளித்தனர். மேலும், நீதிபதிகள் தங்கள் ஒருநாள் ஊதியத்தையும் அளித்தனர். இந்நிலையில், ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் கேரளாவுக்கு நிதிதிரட்ட வித்தியாசமான வழியை பின்பற்றியுள்ளது. அது குறித்த விவரம் வருமாறு:

ராஞ்சி நகரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தனேஷ்வர் மண்டல், சாம்பு மண்டல், உத்பல் ராய் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் மீது மோசடி குற்றச்சாட்டு பதிவாகி இருந்ததால் முன்ஜாமீன் கோரியிருந்தனர்.

இந்த ஜாமீன் மனு நீதிபதி ஏ.பி. சிங் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சிங், உப்தல் ராய் ரூ.7 ஆயிரத்தையும், மற்ற இருவர் தனேஷ்வர், சாம்பு மண்டல் ஆகியோர் தலா ரூ.5 ஆயிரத்தை கேரள முதல்வர் நிவாரண நிதியில் செலுத்தி ரசீது பெற்று, அதை நீதிமன்றத்தில் சமர்பித்த பின் முன்ஜாமீன் தருகிறேன் என்று உத்தரவிட்டார்.

மேலும், ஜார்கண்ட் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹேமந்த் குமார் வாதிடுகையில், கர்நாடகா, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றங்களும் ஜாமீன் கோரியவர்களுக்கு இதேபோன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, முன்ஜாமீன் கோரியவர்கள் நிவாரண நிதிக்கு பணம் செலுத்தி ரசீது செலுத்தியபின் ஜாமீன் மனுவை பரிசீலிப்பதாக கூறி நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x