Last Updated : 20 Aug, 2018 02:39 PM

 

Published : 20 Aug 2018 02:39 PM
Last Updated : 20 Aug 2018 02:39 PM

கேரள மழையில் சான்றிதழ்கள் நனைந்து நாசம்: 12-ம் வகுப்பு மாணவர் மனமுடைந்து தற்கொலை

கேரளாவில் பெய்த பெருமழையில் தனது சான்றிதழ்கள், புத்தகங்கள், உடைகள் அனைத்தும் நாசமாகிப் போனதை நினைத்து மனமுடைந்த 12-ம் வகுப்பு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மழையால் வீடுகளையும், சொத்துக்களையும், உறவுகளையும் இழந்து வாடும் கேரள மக்களுக்கு இந்தச் செய்தி மேலும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

கோழிக்கோடு மாவட்டம், கரந்தூர் நகரைச் சேர்ந்தவர் கைலாஷ்(17வயது). இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ சேர்வதற்குத் தயாராகி இருந்தார். இதற்கான அனுமதிச்சீட்டு, தன்னுடைய சான்றிதழ்கள், புதிய உடைகள் அனைத்தையும் வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார்.

இந்நிலையில், கேரளாவில் கடந்த 10 நாட்களாகப் பெய்த மழையில் கோழிக்கோடு மாவட்டமே வெள்ளநீரில் மூழ்கியது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 10 நாட்களுக்குப் பின் மழை வடிந்து, நேற்றுமுதல் மக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்ல தயாராகினார்.

அப்போது, கைலாஷ் தனது பெற்றோருடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு இருந்தன, மின்னணு பொருட்கள், பாத்திரங்கள், கட்டில், பீரோ, உணவுப்பொருட்கள் அனைத்தும் வெள்ளநீரில் நனைந்து ஊறிப்போய் கிடந்தன.

அப்போது, கைலாஷ் தனது அறையில் வைத்திருந்த சான்றிதழ்கள், ஐடிஐ சேர்வதற்கான கடிதம், புதிய ஆடைகள் அனைத்தையும் தேடியுள்ளார். அவை அனைத்தும் நீரில் ஊறிப்போய் நாசமடைந்துவிட்டன.

இதனால், அங்கேயே கைலாஷ் மனமுடைந்து அழுதுள்ளார் அவரைப் பெற்றோர் தேற்றியுள்ளனர். இந்நிலையில், பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டில் மனமுடைந்த கைலாஷ் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெற்றோர் கைலாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்ததைப் பார்த்து கதறி அழுதனர்.

சாதாரண கூலித்தொழிலாளியான கைலாஷ் தந்தை தனது மகனின் இறப்பைப் பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இது குறித்து குன்னமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு, கைலாஷ் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல வீடுகளை இழந்து தவிக்கும் மக்களின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, அடையாள அட்டைகள் காணாமல் போய்விட்டதாகப் புலம்புகின்றனர். மாணவர்கள் ஏராளமானோரின் சான்றிதழ்கள், சொந்த வீடுகள் வைத்திருப்பவர்களின் ஆவணங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகிப்போய் உள்ளன. இவற்றுக்கு மாற்று ஆவணம் வழங்கக் கோரி அதிகாரிகளை மக்கள் அணுகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x