Published : 22 Aug 2014 09:29 AM
Last Updated : 22 Aug 2014 09:29 AM

இரோம் சானு ஷர்மிளாவை பாதுகாப்போம்: மணிப்பூர் அரசு உறுதி

சமூக சேவகர் இரோம் சானு ஷர்மிளாவின் (42) உடல்நலத்தைப் பாதுகாக்க மணிப்பூர் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப் படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெறக்கோரி 2000-ம் ஆண்டு முதல் ஷர்மிளா உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் வலுக் கட்டாயமாக உணவு அளித்து வருகின்றனர். அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறும் அறை யையே சிறையாக மாற்றினர்.

பல ஆண்டுகளாக சிறையில் இருந்த அவரை விடுதலை செய்ய மணிப்பூர் மாவட்ட நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறிய அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதுகுறித்து மணிப்பூர் உள்துறை அமைச்சர் கைகாங்கம் கூறியபோது, இரோம் சானு ஷர்மிளாவின் உடல்நலத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார்.

குடும்பத்திலிருந்து விலகியிருக்க முடிவு

மருத்துவமனையில் இருந்து சில கி.மீட்டர் தொலைவில்தான் ஷர்மிளாவின் வீடு உள்ளது. அங்கு அவரது தாயாரும் சகோதரரும் வசிக்கின்றனர். ஆனால் ஷர்மிளா வீட்டுக்குச் செல்லவில்லை.

தாயாரை சந்தித்தால் உணர்ச்சிவசப்பட நேரிடும் என்பதால் குடும்பத்தில் இருந்து விலகியிருக்க அவர் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் சாகி தேவி (80) கூறியபோது, எனது மகள் பலவீனம் அடையக்கூடாது. அவரது போராட்டம் வெற்றியடைந்த பின்னர்தான் அவரைச் சந்திப்பேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x