Published : 06 Aug 2018 11:07 AM
Last Updated : 06 Aug 2018 11:07 AM

35ஏ சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை: ஜம்மு காஷ்மீரில் முழுஅடைப்பு; பதற்றம்

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சட்டப்பிரிவின் மூலம் காஷ்மீர் மக்களை தவிர, வெளிமாநில மக்கள் யாரும் அசையா சொத்துக்களை வாங்க முடியாது.

இந்தநிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும்,

பிற மாநில மக்கள் இங்கு சொத்து வாங்க முடியாது என்று தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுக்கு ஆதரவாகவும் காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் நேற்று முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் உள்ளிட்டவையும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் மாநிலத்தின் முக்கிய கட்சிகளான தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை, இந்த சட்டப்பிரிவுக்கு ஆதரவாக கடந்த சில வாரங்களாகவே போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனால், ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு முகாமிலிருந்து புறப்படும் அமர்நாத் யாத்திரையும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரம், பல்தால் மற்றும் பஹல்காம் முகாம்களிலிருந்து யாத்திரை செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதால், இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மாநில அரசு ஒரு மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x